தேனி, மே 30: தேனி மாவட்ட வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை வனப்பகுதியில் உள்ள வறட்சியிலும் வற்றாத நீரோடைகள் தீர்த்து வைத்துள்ளன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை நிலவுகிறது. சில நகரங்களில் வெப்பநிலை 112 பாரன்ஹீட்டை எட்டி உள்ளது.
மதுரையின் வெப்பநிலையே 107 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. தேனி மாவட்டத்தில் பல நாட்கள் 104 டிகிரி பாரன்ஹீட் ஆக இருந்தது. மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசியது. சென்னை உட்பட பல மாவட்டங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள வனநிலங்களில் விலங்குகளின் குடிநீருக்கு வனத்துறை தண்ணீர் தொட்டி வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நிரப்பி வருகின்றனர்.
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் இப்பிரச்னை இல்லை. குறிப்பாக போடி மற்றும் சுற்று வனப்பகுதிகளில் உள்ள அணைக்கரைப்பட்டி ஓடை, வாழைமரத்தொழு ஓடை, அகமலை ஆறு, உலக்குருட்டி ஆறு, சாம்பல் ஆறு, சாலப்பாறை ஓடை உள்ளிட்ட பல ஓடைகளில் தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. தற்போதும் இதில் நீர் வரத்து உள்ளது. இதனால் வனவிலங்குகள் இந்த நீரை குடித்து உயிர் வாழ்கின்றன. இதனால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவது பெருமளவு குறைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.